4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை- சென்னை வானிலை ஆய்வு மையம்


4 மாவட்டங்களில்  இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை- சென்னை வானிலை ஆய்வு மையம்
x

இன்று (சனிக்கிழமை) முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்க இருக்கிறது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மிக்ஜம் புயல் மழையால், பருவமழை தீவிரம் அடைந்து, பின்னர் இடைவெளி விட்டு மீண்டும் மழை பெய்ய உள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (சனிக்கிழமை) முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்க இருக்கிறது.

இன்று தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதில் மிக கனமழை வரை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

நாளை மறுதினமும் (திங்கட்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (செவ்வாய்க்கிழமை) கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். நாளை மறுதினம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், அதற்கு மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை யும் பெய்யக் கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story