சீறிப்பாயும் காளைகள்.. அடக்கும் காளையர்கள்... விறுவிறுப்பாக நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு
1,000 காளைகளுடன், 700 மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை,
பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக மொத்தம் 3,677 காளைகளுடன், 1,412 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தனர். இதில் 1,000 காளைகளுடன், 700 மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, வாடிவாசல், பார்வையாளர் மாடத்தில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Live Updates
- 16 Jan 2024 11:30 AM GMT
14 காளைகளை அடக்கி பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் முதல் இடம் பிடித்துள்ளார். அவர் பரிசாக கார் பெற்றுள்ளார்.
- 16 Jan 2024 11:28 AM GMT
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்து உள்ளது. சிறந்த காளையாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு காளை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
- 16 Jan 2024 11:26 AM GMT
2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பாலமேட்டில் முதல் பரிசை வென்றவர் என்ற பெருமையை பெற்றவர் பொதும்பு பிரபாகரன்.
- 16 Jan 2024 11:17 AM GMT
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், 10 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் 2-வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார். கொந்தகையை சேர்ந்த பாண்டீஸ்வரன் மற்றும் சரவணன் ஆகியோர் தலா 7 காளைகளை அடக்கி 3-வது இடத்தில் உள்ளனர்.
- 16 Jan 2024 10:57 AM GMT
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதி சுற்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை நடந்த 9 சுற்று போட்டிகளில் 40 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
- 16 Jan 2024 10:56 AM GMT
இதுவரை நடந்த 9 சுற்றுகளில் 781 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு உள்ளன. பொதும்பு பிரபாகரன் 12 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளார்.
- 16 Jan 2024 10:49 AM GMT
மதுரை எலியார்பத்தியில் நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் காளை முட்டியதில் ரமேஷ் என்ற வாலிபர் பலியாகி உள்ளார்.
- 16 Jan 2024 9:43 AM GMT
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் என்பவர் காயம் அடைந்துள்ளார். அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
- 16 Jan 2024 9:29 AM GMT
8 காளைகளை அடக்கி பிரபாகரன் முன்னிலை வகிக்கிறார். 6 காளைகளை அடக்கி தமிழரசன் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.