ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது


ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது
x

வீட்டுமனைக்கு அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை

செய்யூர்,

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சீவாடி ஊராட்சியில் சென்னையை சேர்ந்த நிகமத்துல்லா என்பவர் நிலம் வாங்கி வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார்.

அந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய சீவாடி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதனை அணுகினார். அப்போது அவர், தனக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிகமத்துல்லா, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து அவரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.30 ஆயிரத்தை கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

அதன்படி நிகமத்துல்லா சீவாடி ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதனிடம் ரசாயன பொடி தடவிய ரூ.30 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அரங்கநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story