படிக்க சொல்லி வற்புறுத்திய பெற்றோர்... கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை


படிக்க சொல்லி வற்புறுத்திய பெற்றோர்... கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
x

சக்திவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருவள்ளூர்,

செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட சரத் கண்டிகை எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரஜினி. கட்டிடத்தொழிலாளி. இவருடைய மகன் சக்திவேல்(வயது 18). பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சக்திவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சக்திவேலுக்கு கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லை. வேலைக்கு செல்லவே விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர் அவரை கல்லூரிக்கு சென்று படிக்கும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story