நாடாளுமன்ற தேர்தல்: 24-ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் டி.டி.வி. தினகரன்


நாடாளுமன்ற தேர்தல்: 24-ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் டி.டி.வி. தினகரன்
x
தினத்தந்தி 20 March 2024 9:25 AM GMT (Updated: 20 March 2024 12:07 PM GMT)

தேனியில் வருகிற 24-ந் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை டி.டி.வி. தினகரன் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதனால் நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை இன்று முதல் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய 27-ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் மீது 28-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்பபெற 30-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

தமிழகத்தில் அ.ம.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகிற 24-ந் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தமிழ்நாடு முழுவதும் வருகிற 24.03.2024 முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

24.03.2024 அன்று தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story