இன்று பகுதி சந்திர கிரகணம் - பல்வேறு கோவில்களில் தரிசன நேரம் மாற்றம்..!


இன்று பகுதி சந்திர கிரகணம் - பல்வேறு கோவில்களில் தரிசன நேரம் மாற்றம்..!
x
தினத்தந்தி 28 Oct 2023 3:50 AM GMT (Updated: 28 Oct 2023 7:34 AM GMT)

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

சென்னை,

சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும், இந்த நிகழ்வு பவுர்ணமி நாளில்தான் ஏற்படும். நிலவு மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுவதுமாக மறைத்தால் முழு சந்திரகிரகணம் என்றும், சூரிய ஒளியை பகுதியளவு மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இன்று நள்ளிரவில் பூமியின் மங்கலான நிழல் வட்டத்தில் சந்திரன் நுழைந்தாலும், பூமியின் இருண்ட நிழலில் (அம்ப்ரல் கட்டம்) நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் நுழையும். பூமியின் இருண்ட நிழல் சந்திரன் மீது விழுவது, நாளை அதிகாலை 1:05 மணிக்கு தொடங்கி 02:24 மணி வரை நிகழவுள்ளது.

இந்தியாவில் தெரியுமா?

ஆசியா, ரஷியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளில் கிரகணத்தை பார்க்க முடியும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிரகணம் தெரியும். டெல்லியில் இருந்து பார்த்தால் வானத்தின் தென்மேற்கு பகுதியில் கிரகணம் தெரியும்.

கிரகணத்தை எப்படி பார்ப்பது?

சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம். சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. எனினும், பைனாகுலர்கள் அல்லது தொலைநோக்கிகள் மூலம் பார்க்கும்போது மிக தெளிவாக கிரகணத்தை கண்டு ரசிக்கலாம். கிரகணம் நன்றாக தெரியவேண்டுமானால், பிரகாசமான விளக்கு ஒளி இருக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருண்ட, ஒளி இல்லாத பகுதிகளில் சென்று பார்க்கவேண்டும்.

கோவில்களில் தரிசன நேரம் மாற்றம் :

* சந்திர கிரகணத்தையொட்டி இன்று இரவு 7.05 மணி முதல் 29-ந் தேதி அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

* தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் இன்று இரவு 8 மணிக்கு அர்த்தசாம பூஜை செய்து நடை சாத்தப்படும். சந்திரகிரகணம் முடிந்ததும் நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

* திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு சாயராட்சை பூஜை முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும். நாளை வழக்கம்போல் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

* மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை கமிஷனர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'இன்று இரவு 7 மணி முதல் நடைசாத்தப்படுகிறது. நாளை வழக்கம்போல காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்' என்று தெரிவித்துள்ளார்.

* திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று மாலை 5.30 மணிக்கு நடை சாத்தப்படும். நாளை வழக்கம்போல் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

* இதேபோல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இன்று மாலை சாயரட்சை அர்த்தஜாமம் பூஜை முடிந்து இரவு 7 மணிக்கு பிறகு கோவில் நடை சாத்தப்படுகிறது. நாளை காலை 5.30 மணிக்கு ஆகம விதிப்படி சம்ப்ரோக்ஷண பூஜைகள் செய்து காலை 7 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story