விமானத்தின் அவசரகால கதவை திறந்த பயணி... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு


விமானத்தின் அவசரகால கதவை திறந்த பயணி... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Feb 2024 11:48 AM GMT (Updated: 14 Feb 2024 12:01 PM GMT)

புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானத்தில், பயணி ஒருவர் அவசரகால கதவை திறப்பதற்கான பட்டனை அழுத்தியுள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அப்போது திடீரென விமானத்தின் அவசரகால கதவு திறக்கப்பட்டதற்கான எச்சரிக்கை ஒலி கேட்கத் தொடங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே விமானத்தில் இருந்த பயணி ஒருவர் அவசரகால கதவை திறப்பதற்கான பட்டனை அழுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அது அவசரகால கதவுக்கான பட்டன் என்பது தனக்கு தெரியாது என்றும், பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால், அதனை அழுத்திவிட்டதாகவும் அந்த பயணி கூறியுள்ளார். அவர் கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்த விமான ஊழியர்கள், அந்த பயணியை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர்.

இதனையடுத்து விமான நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவசரகால கதவை திறந்த நபர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சரோஸ் என்பதும், அவர் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தினால், சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story