சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் ஆதார் மற்றும் பான் கார்டுகள் குவிந்து கிடந்ததால் பரபரப்பு


சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் ஆதார் மற்றும் பான் கார்டுகள் குவிந்து கிடந்ததால் பரபரப்பு
x

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் ஆதார் மற்றும் பான் கார்டுகள் குவிந்து கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிய பன்னாட்டு ஒருங்கிணைந்த விமான முனைய வருகை பகுதி 6-வது வாசல் அருகே தொட்டியில் குவியல், குவியலாக பயணிகளின் ஆதார், பான் கார்டுகள், அடையாள அட்டைகள் கொட்டி கிடந்தன. இதை பார்த்து அங்கிருந்த விமான பயணிகள், பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதில் சிலர், அங்கு கொட்டி கிடந்த ஆதார், பான் கார்டுகளை கையில் எடுத்து பார்த்தனர். பாதுகாப்புக்கு நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார், அவர்களை தடுத்து விமான நிலைய ஊழியர்கள் வைத்து சென்று உள்ளதாக தெரிவித்தனர்.

இந்திய மக்களின் முக்கியமான அடையாள ஆவணம் ஆதார் கார்டு. வருமான வரிக்கான நிரந்தர கணக்கு எண் கொண்டது பான் கார்டு ஆகியவற்றை விமானத்தில் செல்ல வரும் பயணிகள் தவறுதலாக விட்டு செல்கின்றனர். கேட்பாரற்று விமான நிலையத்துக்குள் கிடக்கும் கார்டுகளை விமான நிலைய ஊழியர்கள் எடுத்து விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைப்பார்கள்.

அங்கு குறிப்பிட்ட காலத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் கார்டுகளை, தவற விட்டவர்கள் வந்து பெற்று செல்வார்கள். ஆனால் நீண்ட காலமாக யாரும் வராமல் தேங்கி கிடக்கின்றன. தற்போது கார்டுகளை தவற விட்டவர்கள் இணைய தளம் மூலமாக புதிய ஆதார் கார்டுகள் எடுத்துகொள்கின்றனர்.

எனவே கார்டுகளை தவற விட்டவர்கள் மீண்டும் வந்து கேட்பதும் இல்லை. கார்டுகளை அப்புறப்படுத்தி உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story