போதிய அளவு பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் போராட்டம்
![போதிய அளவு பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் போராட்டம் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/24/1602632-busessssss.webp)
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் திருச்சி, சேலம், திருவண்ணாமலை பஸ்க்கு நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் அங்கிருந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வண்டலூர்,
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) தைப்பூசம் நாளை (வெள்ளிக்கிழமை) குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் பணிபுரியும் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வந்தனர்.
இதற்கிடையே புதுச்சேரி, கடலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற இடங்களுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் திருச்சி, சேலம், திருவண்ணாமலை பஸ்க்கு நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் அங்கிருந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளுடன் வெளியே செல்லும் அரசு பஸ்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.