கூடுதல் விலைக்கு மதுவிற்ற 60 ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்


கூடுதல் விலைக்கு மதுவிற்ற 60 ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 14 Jun 2023 7:48 PM GMT (Updated: 15 Jun 2023 10:28 AM GMT)

கூடுதல் விலைக்கு மது விற்ற 60 ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் டாஸ்மாக் மேலாளர் நடவடிக்கை

சேலம்

சேலம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மது விற்ற 60 டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து டாஸ்மாக் மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதிகாரிகள் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் 220-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுகிறதா? எனவும், அனுமதி பெறாமல் டாஸ்மாக் பார்கள் ஏதேனும் செயல்படுகிறதா? எனவும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில் டாஸ்மாக் சேலம் முதுநிலை மண்டல மேலாளர் நர்மதா தேவி மற்றும் மாவட்ட மேலாளர் குப்புசாமி ஆகியோர் தலைமையில் கொண்ட குழுவினர் மாவட்டம் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் கடந்த சில நாட்களாக அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது, அவர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி சென்ற மதுபிரியர்களிடம் கேட்டறிந்தனர்.

ரூ.1 லட்சம் அபராதம்

அதற்கு ஒரு குவார்ட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவித்தனர். மேலும், பெரும்பாலான கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ததாக 60 ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேசமயம், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் புதிய விலைப்பட்டியலை மதுபிரியர்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும் எனவும், வெளி நபர்களை கடைகளில் பணியில் வைத்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடாது என்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குப்புசாமி கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்து, கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்த 60 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, மதுபாட்டிலுக்கு ரூ.5 கூடுதல் வசூலித்தால் ரூ.5,650 அபராதமும், ரூ.10 வசூலித்தால் ரூ.11,550 அபராமும் விதிக்கப்படும். அதன்படி, 50-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்து 60 ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த பார்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகள் அனுமதித்த நேரத்தில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் எனவும், சந்து கடைகளுக்கு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


Next Story