மீஞ்சூரில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


மீஞ்சூரில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x

மீஞ்சூர் பேரூராட்சி பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கவும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தவும் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் திடீரென வருகை தந்து ஆய்வு செய்தார்.

அவரது உத்தரவின்படி உதவி இயக்குனர் கண்ணன் மீஞ்சூர் பஜாரில் உள்ள கடைகளுக்கு நேரில் சென்று பிளாஸ்டிக் கவர் மற்றும் பைகளை விற்கக் கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அப்போது கடைகளில் சோதனையிட்ட அவர் தடைசெய்யப்பட்ட 197 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தார்.

சாலையில் முக கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு அபராதம் விதித்தார். பின்னர் முக கவசத்தின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அப்போது மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு இதர பிரிவு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


Next Story