சாலைகளில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களுக்கு அபராதம் - சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு


சாலைகளில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களுக்கு அபராதம் - சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு
x

சென்னையில் சாலைகளில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் நீண்ட நாட்களாக சாலைகளில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அகற்றுவது குறித்து மேயர் பிரியா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் பழுதடைந்த நிலையிலும், சுகாதார சீர்கேடு மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தி அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான கள ஆய்வில் மாநகராட்சி பகுதிகளில் 138 வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வாகனங்களின் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து தங்கள் வாகனங்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அவ்வாறு அப்புறப்படுத்தப்படாத வாகனங்கள் வரும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்படும் என்றும், உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம் விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story