தமிழகத்தில் 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி - ஐகோர்ட்டில் தமிழக காவல்துறை தகவல்


தமிழகத்தில் 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி - ஐகோர்ட்டில் தமிழக காவல்துறை தகவல்
x

உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் 23 இடங்களில் அனுமதி வழங்க தயார் என ஐகோர்ட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நடைபெற இருந்த அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்தது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பேரணிக்கு அனுமதி வழங்க இயலாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதிக்குமாறு, அதற்கான நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், "கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற 47 இடங்களில் அனுமதி வழங்கவில்லை. அனுமதியளித்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையை காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்க்கிறது" என்று வாதிட்டார்.

இதையடுத்து காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ந்தேதி கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்தார்.

மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அதற்கு அனுமதி வழங்க காவல்துறை தயாராக உள்ளது என்றும், ஆனால் எஞ்சியுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் தற்போது பல இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளது என்று தெரிவித்த அவர், ஆர்.எஸ்.எஸ். தரப்பினர் மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உளவுத் துறை அறிக்கையை பார்த்த பிறகு 47 இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story