கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்


கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்
x
தினத்தந்தி 25 Oct 2023 1:05 PM GMT (Updated: 25 Oct 2023 1:40 PM GMT)

கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கிப் பிடித்தனர்.

அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்துள்ளது. வினோத்திடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கிண்டி காவல்நிலைய போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் கவர்னரின் செயலாளர் கிரிலோஷ் குமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை வேப்பேரியில் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, "பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசிய வினோத் மதுபோதையில் இருந்துள்ளார்.

கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசவில்லை. சர்தார் பட்டேல் சாலையில் தான் வீசினார். கவர்னர் மாளிகைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. வினோத் மீது ஏற்கனவே 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறினார்.


Next Story