ஆற்றில் மூழ்கி உடற்கல்வி ஆசிரியர் பலி


ஆற்றில் மூழ்கி உடற்கல்வி ஆசிரியர் பலி
x
தினத்தந்தி 22 Oct 2023 8:00 PM GMT (Updated: 22 Oct 2023 8:00 PM GMT)

வால்பாறை அருகே நண்பர்களுடன் சுற்றுலா வந்த உடற்கல்வி ஆசிரியர் ஆற்றில் மூழ்கி பலியானார்.

கோயம்புத்தூர்
வால்பாறை அருகே நண்பர்களுடன் சுற்றுலா வந்த உடற்கல்வி ஆசிரியர் ஆற்றில் மூழ்கி பலியானார்.


உடற்கல்வி ஆசிரியர்


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பில்சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரதீப்(வயது 37). இவர் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.


இந்தநிலையில் பிரதீப் தனது நண்பர்கள் 3 பேருடன் வால்பாறை அருகே உள்ள காடம்பாறைக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தார். இவர்கள் இரவில் அங்குள்ள மற்றொரு நண்பர் வீட்டில் தங்கினர்.


ஆழமான பகுதிக்கு...


பின்னர் நேற்று காலையில் அவரையும் அழைத்துக்கொண்டு அப்பர் ஆழியார் ஆற்றில் குளிக்க சென்றனர். அங்கு அவர்கள் 5 பேரும் உற்சாகமாக குளித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற பிரதீப் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் காடம்பாறை போலீசாருக்கும், வால்பாறை வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.


சோகம்


அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் உள்ள ஒரு பாறை இடுக்கில் பிரதீப் பிணமாக மிதந்து கொண்டு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு,பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 20-ந் தேதி சோலையார் ஆற்றில் மூழ்கி 5 மாணவர்கள் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் அப்பர் ஆழியார் ஆற்றில் மூழ்கி உடற்கல்வி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Next Story