கடலூர் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் குழாய் வெடித்து விபத்து; ரசாயன புகை வெளியேறியதால் பரபரப்பு


கடலூர் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் குழாய் வெடித்து விபத்து; ரசாயன புகை வெளியேறியதால் பரபரப்பு
x

சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் சிப்காட் பகுதியில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் நேற்று பாய்லர் பராமரிப்பு பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரவில் சோதனை ஓட்டம் நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக பாய்லருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து அந்த குழாயில் இருந்து ரசாயன புகை வெளியேறியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் தொழிற்சாலை ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், குழாயில் ஏற்பட்ட வெடிப்பு சிறிது நேரத்தில் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் தொழிற்சாலையில் இருந்து ரசாயன புகை வெளியேறியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீதிகளில் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story