கம்பத்தில் பரிதாபம்:ஐஸ் பெட்டிக்கு 'சார்ஜ்' போட்ட வாலிபர் மின்சாரம் பாய்ந்து சாவு


கம்பத்தில் பரிதாபம்:ஐஸ் பெட்டிக்கு சார்ஜ் போட்ட வாலிபர் மின்சாரம் பாய்ந்து சாவு
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:47 PM GMT)

கம்பத்தில் ஐஸ் பெட்டிக்கு ‘சார்ஜ்’ போட்ட வாலிபர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.

தேனி

ஐஸ் பெட்டிக்கு 'சார்ஜ்'

கம்பம் கிராமச்சாவடி தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் அதே பகுதியில் ஐஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் தள்ளுவண்டி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் ஐஸ் பெட்டிகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். பகல் நேரத்தில் வாகனங்களில் ஐஸ் பெட்டிகளை விற்பனைக்கு கொண்டு சென்று இரவில் கம்பெனிக்கு திரும்பி வருவார்கள்.

அதன் பின்னர் அந்த வாகனங்களில் உள்ள ஐஸ் பெட்டியில் குளிர்ச்சியாக இருக்க தினமும் இரவு மின்சாரம் மூலம் 'சார்ஜ்' போடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு கணேசனின் இளைய மகன் செல்லப்பாண்டி (வயது 34) ஐஸ் பெட்டிக்கு 'சார்ஜ்' போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

வாலிபர் பலி

இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் மயக்கமடைந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஸ் பெட்டிக்கு 'சார்ஜ்' போட்டபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story