தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது..!


தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது..!
x

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடக்கிறது. இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்கும், பின்னர் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வை எழுதுவதற்கும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர். சென்னை மாநகரில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து 45 ஆயிரத்து 982 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 225 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைகளில் போதிய மின்சார வசதி, குடிநீர் வசதி, இருக்கை வசதி ஆகியவை செய்து தரப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த தேர்வை கண்காணிக்க பொறுப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் இந்த பணிகளை உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

முதல் நாளான இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளியில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆங்கிலத் தேர்வு நடக்க இருக்கிறது. தொடர்ச்சியாக ஒவ்வொரு பாடப் பிரிவினருக்கும் தேர்வு நடத்தப்பட்டு, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகளுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு பெற இருக்கிறது.

தேர்வு முடிந்ததும், அடுத்த மாதம் 10-ந் தேதியில் இருந்து 21-ந் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணியில் 48 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். திருத்தும் பணி நிறைவுபெற்று, மதிப்பெண் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற மே மாதம் 5-ந் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story