மாதவரம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலி


மாதவரம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலி
x

மாதவரம் அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

சென்னை

பிளஸ்-2 மாணவர்

சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 18). இவர், பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி விடுமுறை நாட்களில் திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்யும் வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சமையல் வேலை செய்து வந்தார். பின்னர் தன்னுடன் வேலை செய்த செந்தில்குமார் (43) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

மாதவரம் ரவுண்டானா அருகே சென்றபோது சோழவரம் ஞாயிறு பகுதியில் இருந்து சென்னை வள்ளலார் நகர் நோக்கி வந்த மாநகர பஸ் (தடம் எண் 57 ஜே) இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் சாலையில் விழுந்த ராஜேஷ் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொருவர் படுகாயம்

செந்தில்குமார் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து மற்றும் போலீசார் பலியான ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story