பள்ளியில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவர்


பள்ளியில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவர்
x

விருத்தாசலம் அருகே அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த எம்.பரூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. கூலி தொழிலாளி. இவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 17). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மாணவர் ஜெயக்குமார் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆசிரியர் ஒருவர், ஏன் சரியாக முடிவெட்டவில்லை எனக்கேட்டு அவரை பள்ளியின் வெளியில் நிற்க வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் பள்ளியின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஜெயக்குமார், அருகில் உள்ள கடைக்கு சென்று, விஷ மருந்தை வாங்கி வந்து பள்ளிக்கூடத்தின் வெளியே வைத்து குடித்ததாக கூறப்படுகிறது.

ஆஸ்பத்திாியில் சிகிச்சை

இதில் மயங்கிய மாணவர் ஜெயக்குமாரை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story