பிரதமர் மோடி போஸ்டர் கிழிப்பு: முன்னாள் ராணுவ வீரர் கைது


பிரதமர் மோடி போஸ்டர் கிழிப்பு: முன்னாள் ராணுவ வீரர் கைது
x

பிரதமர் மோடி போஸ்டர் கிழித்தது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

மத்திய பா.ஜ.க. ஆட்சியின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி, பிரதமர் மோடியை வாழ்த்தி சென்னை எழும்பூர் பஸ் நிலையம் அருகே பா.ஜ.க.வினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இந்த போஸ்டர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து எழும்பூர் போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க.வினர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் பிரதமர் மோடியின் போஸ்டரை கிழித்த நபர் அடையாளம் காணப்பட்டார். அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் காவலாளியாக பணியாற்றி வரும் அண்ணாதுரை (வயது 51) என்பது தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர், ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும், இவருடைய சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் மேலையூர் கிராமம் என்பதும் தெரிய வந்தது. மதுபோதையில் பிரதமர் மோடியின் போஸ்டரை கிழித்துவிட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விசாரணைக்கு பின்னர் அவரை போலீசார் எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர்.


Next Story