பிரதமர் மோடியின் பேச்சு பா.ஜ.க.வின் தோல்வியை உறுதிப்படுத்தி வருகிறது - செல்வப்பெருந்தகை


பிரதமர் மோடியின் பேச்சு பா.ஜ.க.வின் தோல்வியை  உறுதிப்படுத்தி வருகிறது - செல்வப்பெருந்தகை
x

இரண்டு கட்ட தேர்தல் முடிந்து களநிலவரம் பா.ஜ.க.வுக்கு பாதகமாக இருக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாததை இட்டுக்கட்டி பட்டியலின, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிற இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடர்ந்து செய்து வருகிறார்.இந்த பிரசாரத்தை செய்வதற்கு காரணம் உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலின்படி பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற ரகசிய அறிக்கை தான். அதன் காரணமாகவே மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து சிறுபான்மையினருக்கு எதிராக துவேஷ பிரசாரத்தை மிக மிக கீழ்த்தரமாக இழிவான முறையில் பிரதமர் மோடி செய்து வருகிறார்.

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பேசிய பிரதமர் மோடி, நாள்தோறும் காங்கிரஸ் கட்சியை பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் பேசுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பேசி, பேசி நாட்டு மக்களிடையே பேசு பொருளாக மாற்றி விட்டார்.கடந்த காலத்தில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பேச்சு சமீப காலமாக பேசப்படுவதில்லை. ஏனெனில் இரண்டு கட்ட தேர்தல் முடிந்து களநிலவரம் பா.ஜ.க.வுக்கு பாதகமாக இருக்கிறது. இதையெல்லாம் அறிந்த பிரதமர் மோடி, அச்சம், பீதியினால் மிகுந்த பதற்றத்துடன் எதை பேசுகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் நினைவிழந்து விரக்தியில் வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்.இத்தகைய பேச்சுகள் பா.ஜ.க.வின் தோல்வியை நாளுக்கு நாள் உறுதிபடுத்தி வருகிறது. இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையப்போவது காலத்தின் கட்டாயமாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story