பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x

பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் முத்தோப்பு கைலாசநாதர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ரவி (வயது 55). பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகர துணை செயலாளர். இவருடைய அண்ணனான கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டை சேர்ந்த கமலக்கண்ணன் மகன் தொழிலாளி ஜெய்கணேஷ் (36) என்பவர் ரவியின் உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால் ரவிக்கும், ஜெய்கணேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 30.1.2021 அன்று பகல் 12.05 மணியளவில் ரவி தனது வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகைக்கு மாடுகளை ஓட்டியபடி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெய்கணேஷ், முன்விரோதம் காரணமாக தனது சித்தப்பா என்றும் பாராமல் ரவியை தகாத வார்த்தையால் திட்டியதோடு தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக கத்தியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த ரவி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ரவி இறந்து விட்டதாக கூறினார்.

ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்கணேசை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட ஜெய்கணேசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெய்கணேஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்பிரமணியன் ஆஜரானார்.


Next Story