தர்மபுரியைபோதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு

தர்மபுரியை போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் பேசினார்.
தர்மபுரியை போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் பேசினார்.
ஆய்வுக்கூட்டம்
தர்மபுரி மாவட்ட போலீசாரின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் தர்மபுரியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து போலீசார் கலந்து கொண்டு அந்தந்த போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து கூறினர். பின்னர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை சரியான முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பதிவு செய்யப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் அந்தந்த காவல் நிலையங்களில் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியல் எடுத்து உடனடியாக அவர்களையும் கைது செய்ய வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பின் மூலம் போதை பொருட்கள் இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
வாகனங்கள் ஆய்வு
முன்னதாக மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து வாகனங்கள், வேன்கள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? அந்த வாகனங்களின் தற்போதைய செயல்திறன் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் போதுமானதாக உள்ளதா? என்றும் கேட்டறிந்தார்.
இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன், பாலசுப்பிரமணியம், உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயபால், ரமேஷ், சத்தியமூர்த்தி, மகாலட்சுமி, சிந்து மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.