டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் அனுப்பிய சம்மன் - 2 பேர் விசாரணைக்கு நேரில் ஆஜர்


டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் அனுப்பிய சம்மன் - 2 பேர் விசாரணைக்கு நேரில் ஆஜர்
x

போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து இன்று 2 பேர் விசாரணைக்காக கோவை போலீசார் முன்பு நேரில் ஆஜராகியுள்ளனர்.

கோவை,

கோவை சரக டி.ஐ.ஜியாக வேலை பார்த்தவர் விஜயகுமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அவரது வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர். அவ்வாறு சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள், கருத்து கூறியவர்கள், அதை வெளியிட்ட சமூக ஊடகங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர்.

அதன்படி சில நாட்களுக்கு முன்பு, டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அவர்கள் அனைவரும் இன்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் 2 பேர் விசாரணைக்காக கோவை ராமநாதபுரம் போலீசார் முன்பு நேரில் ஆஜராகியுள்ளனர். இந்திய மக்கள் மன்றம் என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தி வரும் வராஹி, யூ-டியூபர் ராஜவேல் நாகராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ள நிலையில், அவர்களிடம் உதவி ஆணையர் கரிகாலன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story