பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் - முத்தரசன்


பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் - முத்தரசன்
x

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு செலுத்தி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு அரசு நேர்மறையாக கருதிப் பார்த்து, நல்ல நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைக்காது என்பது வேதனையளிக்கிறது.

அரசின் பிற துறைகளில் பணிபுரியும் பகுதிநேர, தொகுப்பூதிய பணியாளர்கள் பொங்கல் போனஸ் பெறும்போது, பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்குவது தான் நியாயமாகும். பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கருணையோடு பரிசீலித்து பொங்கல் போனஸ் வழங்குவதுடன் அவர்களது நீண்டகால கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story