பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கம்


பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 23 Feb 2024 11:42 PM GMT (Updated: 24 Feb 2024 12:53 AM GMT)

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள மலைப்பாதையில் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் இம்மாத பவுர்ணமியையொட்டி இன்று (சனிக்கிழமை) பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர்.

இதையொட்டி திருவண்ணாமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) காலை 11 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) விழுப்புரத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில்கள் தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், ஆயந்தூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்றுசெல்லும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story