பழவேற்காடு ஏரியில் படகில் இருந்து தவறி விழுந்த இறால் பண்ணை உரிமையாளர் சாவு


பழவேற்காடு ஏரியில் படகில் இருந்து தவறி விழுந்த இறால் பண்ணை உரிமையாளர் சாவு
x

பழவேற்காடு ஏரியில் படகில் இருந்து தவறி விழுந்த இறால் பண்ணை உரிமையாளர் பலியானார்.

திருவள்ளூர்

சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் அருண் (வயது 48). இவர் மீஞ்சூர் அடுத்த தேவதானம் கிராமத்தில் இறால் பண்ணை நடத்தி வந்தார். இந்த இறால் பண்ணையில் மேலாளராக பொன்னேரி அடுத்த மெதூர் கிராமத்தை சேர்ந்த சம்பத் (47) வேலை செய்து வருகிறார்.

நேற்று அருண் மற்றும் சம்பத் ஆகிய 2 பேரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட படகு சவாரி போக்குவரத்து மூலம் பழவேற்காடு ஏரியில் உள்ள முகதுவார பகுதிக்கு சென்றனர். அங்கு பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் படகில் பழவேற்காட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக படகிலிருந்து இறால் பண்ணை உரிமையாளர் அருண் தவறி ஏரியில் விழுந்தார். இதையடுத்து அவருடன் சென்ற சம்பத் மீனவர்களின் உதவியுடன் ஏரியில் விழுந்த அருணை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

பின்னர் அங்கிருந்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அருண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பழவேற்காடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


Next Story