4 நாள் பயணமாக முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 5-ந் தேதி சென்னை வருகிறார்


4 நாள் பயணமாக முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 5-ந் தேதி சென்னை வருகிறார்
x

4 நாள் பயணமாக முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 5-ந்தேதி சென்னை வருகிறார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நாளை மறுநாள்(சனிக்கிழமை) மாலை 6.50 மணிக்கு கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் கார் மூலம் சென்னை கிண்டி ராஜ்பவன் சென்று தங்குகிறார்.

மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை ராஜ்பவனில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை விழாவில் பங்கேற்கிறார். விழா முடிந்து மீண்டும் கிண்டி ராஜ்பவன் திரும்புகிறார்.

7-ந் தேதி(திங்கட்கிழமை) காலை ராஜ்பவனில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். காலை 9.55 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி மாநிலம் செல்கிறார்.

8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மாலை 5.05 மணிக்கு ஹெலிகாப்டரில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு வழியனுப்பு விழா நடக்கிறது. மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

ஜனாதிபதியின் சென்னை வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் விமான நிலைய பாதுகாப்பு, போலீஸ் உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.


Next Story