பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டி கழிக்க வேண்டாம், அதையும் ஒரு கை பார்ப்போம் - அமைச்சர் அன்பில் மகேஷ்


பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டி கழிக்க வேண்டாம், அதையும் ஒரு கை பார்ப்போம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
x

'இந்தியா' கூட்டணியில் பிரதமர் என்ற பார்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கம் திரும்பியுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

சேலம்,

தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. தற்போது 2-வது மாநாடு சேலத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்காக சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இளைஞரணி கண்ட களங்கள், திராவிட மாடல் - எல்லோருக்கும் எல்லாம் உள்ளிட்ட 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் கருத்துரை வழங்கி வருகின்றனர். இந்த மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் 'தமிழ்நாட்டின் கல்வி புரட்சி' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இல்லம் தேடி கல்வி திட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். காலை உணவு திட்டம் மிகவும் மகத்தான திட்டம். தமிழகத்தில் உள்ள திட்டங்களை பார்த்து மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் சதவீதம் உயர்ந்துள்ளது. திமுக ஆட்சி காலங்களில்தான் ஏராளமான கல்லூரிகள் தொடங்கப்பட்டன. கல்விக்கான பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது.

'இந்தியா' கூட்டணியில் பிரதமர் என்ற பார்வை நம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கம் திரும்பியுள்ளது. பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டி கழிக்க வேண்டாம்; அதையும் ஒரு கை பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story