பிரதமர் மோடி வரும் 8-ந்தேதி சென்னை வருகை..!


பிரதமர் மோடி வரும் 8-ந்தேதி சென்னை வருகை..!
x
தினத்தந்தி 29 March 2023 10:30 AM GMT (Updated: 29 March 2023 11:02 AM GMT)

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வருகிறார்.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வருகிறார். சென்னை விமானநிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா, சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவை துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி அதே நிகழ்ச்சியில் சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார். இதற்காக ஜெயின் கல்லூரியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் திறந்து வைக்க இருக்கும் புதிய விமான முனையத்தில் ஆண்டுக்கு சுமார் 2.7 கோடி பயணிகளை கையாள முடியும் அளவுக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இந்த முனையம் முழுவதும் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு உள்ளதால் அனைத்து இடங்களும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.

இந்த கட்டிடத்தில் தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் பெருமைகளை பிரதிபலிக்கும் வண்ணமாக வண்ணமயமான கோலங்கள், படங்கள், ஓவியங்கள் தனித்துவத்தில் வரையப்பட்டு உள்ளன. 80 சோதனை கவுண்டர்கள், 8 சுய சோதனை கவுண்டர்கள், 6 லக்கேஜ் கவுண்டர்கள் மற்றும் 108 குடியுரிமை அதிகாரிகள் சோதனை கவுண்டர்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு எளிதில் செல்ல முடியும்.

சென்னையில் ஏப்ரல் 8-ந்தேதி இரு திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி அன்று இரவு கிண்டி கவர்னர் மாளிகையில் தங்குவார் என தெரிகிறது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் சந்தித்து பேச முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிரதமர் சென்னை வருவதையொட்டி விமான நிலையம், விழா மைதானம் என பிரதமர் செல்லும் வழி நெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.


Next Story