மாணவியிடம் நிர்வாணமாக வீடியோ காலில் பேச்சு - கம்பி எண்ணும் கல்லூரி சேர்மன்


மாணவியிடம் நிர்வாணமாக வீடியோ காலில் பேச்சு - கம்பி எண்ணும் கல்லூரி சேர்மன்
x

அருப்புக்கோட்டை அருகே தனியார் கல்லூரி சேர்மன் மாணவியிடம் தவறான முறையில் பேசியதாக மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

விருதுநகர்:

அருப்புக்கோட்டையில் மாணவியிடம் நிர்வாணமாக பேசிய கல்லூரி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

தனியார் கல்லூரி:

அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் அரசு நர்சிங் மற்றும் கேட்டரிங் என்னும் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி விருதுநகர் சாலையில் செயல்பட்டு வந்தது.

பின்னர் தீ தடுப்பு உள்ளிட்ட முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என கூறி 2017 ஆம் ஆண்டு கல்லூரி அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அதே ஆண்டில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையுடன் முறையான அரசு அனுமதி பெற்று தெற்கு தெருவில் வாடகை கட்டிடத்தில் கல்லூரி இயங்கத் துவங்கியது. இக்கல்லூரியில் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தான் அதிகம் பயின்று வருகின்றனர்.

மாணவியுடன் வீடியோ கால்

இந்நிலையில் இக்கல்லூரியின் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் (முன்னாள் பாஜக சிறுபான்மை பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர்) கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் தவறான முறையில் பேசியதாக கூறப்படுகிறது.

அந்த வீடியோ தற்போது அந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளிடம் திடீரென பரவியதால் கல்லூரி மாணவிகள், பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நேற்று கல்லூரியும் மூடி இருந்ததால் கல்லூரிக்கு வந்த மாணவிகள் கல்லூரி வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மாணவிகள் சாலை மறியல்

அதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை டவுன் போலீசார் கைது செய்தனர். எனினும் கல்லூரி மாணவிகள் தங்களின் படிப்புக்கும் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் கல்லூரி கட்டணத்தையும், சான்றிதழ்களையும் திரும்பி தர வலியுறுத்தி திடீரென பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மறியலில் ஈடுபட்டதால் மதுரை விருதுநகர் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், தாசில்தார் அறிவழகன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சேர்மன் கைது

பின்னர் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.

தற்போது அவரை போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பாக ஆஜர்படுத்தப்படுத்தினர். வருகிற 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர் விருதுநகர் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story