கால் துண்டான நிலையில் இறந்து கிடந்த தனியார் பள்ளி டிரைவர்


கால் துண்டான நிலையில் இறந்து கிடந்த தனியார் பள்ளி டிரைவர்
x
தினத்தந்தி 5 Sep 2023 6:45 PM GMT (Updated: 5 Sep 2023 6:47 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே கால் துண்டான நிலையில் இறந்து கிடந்த தனியார் பள்ளி டிரைவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

டிரைவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள உதயாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நீதிமணி மகன் ராஜேஷ்(வயது 38). இவர் தியாகதுருகத்தில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜேஷ் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சாலப்பாக்கம் பகுதியில் இருந்து செம்பியன்மாதேவி கிராமம் செல்லும் வழியில் சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இடது கால் துண்டான நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கொலையா?

இதுபற்றிய தகவல் அறிந்து எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராஜேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜேஷ் நள்ளிரவில் அங்கு எதற்காக வந்தார்? அவர் ஏதேனும் வாகனம் மோதி இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கால் துண்டான நிலையில் தனியாா் பள்ளி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story