ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க, குளிக்க 2-வது நாளாக தடை


ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க, குளிக்க 2-வது நாளாக தடை
x

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 2-வது நாளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல் அருவி

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில்மத்திய நீர்வளத்துறைஅதிகாரிகள் தொடர்ந்துகண்காணித்து வருகின்றனர்.

2-வது நாளாக தடை

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி மேற்கொள்ளவும் தொடர்ந்து 2-வது நாளாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story