15 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு


15 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 30 Aug 2023 11:23 AM GMT (Updated: 30 Aug 2023 11:31 AM GMT)

15 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பத்திரப் பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கான உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் சொந்த கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கிணங்க நடப்பாண்டில் ஏற்கெனவே 44 புதிய அரசு கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி அரசாணைகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ.27.48 கோடி மதிப்பில் மேலும் 15 புதிய அரசு கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி ஒரே நாளில் அதாவது 17.08.2023 அன்று அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி மொத்தம் 15 புதிய கட்டிடங்களில் தற்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அப்பகுதியிலேயே உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் புதிய சொந்த கட்டிடமும் நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களான கள்ளிக்குடி, திருமங்கலம், வலங்கைமான்,திருப்போரூர், பென்னாகரம், உப்பிலியாபுரம், நெல்லிக்குப்பம், விராலிமலை, முசிறி, காட்டுப்புத்தூர், அவினாசி, குன்னத்தூர் மற்றும் கயத்தாறு ஆகிய 14 சார்பதிவாளர் அலுவலங்களின் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு அதே இடத்தில் உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் புதிய வடிவமைப்புடன் கூடிய சொந்த கட்டிடங்களும் கட்டப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story