தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை முழுமையாக வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு


தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை முழுமையாக வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Dec 2023 5:19 PM IST (Updated: 27 Dec 2023 5:40 PM IST)
t-max-icont-min-icon

நிதியுதவி வழங்க வேண்டிய மத்திய அரசு மாற்றாந்தாய் போக்கில் அலட்சியம் காட்டி வருகிறது என முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனவரி 8-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"டிசம்பர் 3, 4 தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக பெய்த பெருமழையால் தலைநகர் சென்னையும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து போனது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவித்த மக்களை பாதுகாக்கவும், மீட்டு மறுவாழ்வு தொடங்கவும் தமிழக அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட்டது. பேரிடர் நிவாரண உதவிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டிய மத்திய அரசு மாற்றாந்தாய் போக்கில் அலட்சியம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் டிசம்பர் 18-ந்தேதி தென் தமிழகத்தில் பெய்த பெருமழையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாநகர தெருக்களிலும், வீடுகளிலும் வெள்ளம் புகுந்து தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 கோடி மக்கள் வாழும் பகுதி பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து, தமிழக முதல்-அமைச்சர் கோரியுள்ள ரூபாய் 21 ஆயிரத்து 692 கோடியை முழுமையாக உடனடியாக வழங்க வேண்டும். ஆனால் மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் அவதூறு பேசி, தமிழக மக்களை அவமதிக்கும் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருவது, வெந்த புண்ணில் வேல் கொண்டு தாக்குவதாக அமைந்துள்ளது.

மத்தியக் குழு விரிவாக பயணம் செய்து, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளது. மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பார்வையிட்டு சென்றுள்ளார். தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி, முதல்-அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

இவ்வளவுக்கும் பிறகு இதுவரை தமிழகம் சந்தித்த இயற்கை சீற்றப் பேரழிவை எதிர்கொள்ள பேரிடர் நிவாரண நிதி வழங்காத மத்திய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை முழுமையாக வழங்கவும் வலியுறுத்தி ஜனவரி 8, 2024 திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story