புதுமாவிலங்கை, அகரம் பகுதிகளில் சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


புதுமாவிலங்கை, அகரம் பகுதிகளில் சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
x

புதுமாவிலங்கை, அகரம் பகுதிகளில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் பேரம்பாக்கம் சாலையில் புதுமாவிலங்கை, அகரம் பகுதிகளில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சாலையில் படுத்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக ஓய்வெடுத்து வருகிறது. இதன் காரணமாக தினம்தோறும் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதில் கால்நடைகளுக்கும் காயம் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையில் படுத்து ஓய்வு எடுப்பதால் அடிக்கடி கால்நடைகள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.


இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக விபத்துக்கள் ஏற்படும் வகையில் கால்நடைகளை திரிய விட்டால் கால்நடைகளில் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார்.


இருப்பினும் கால்நடைகளின் உரிமையாளர்கள் கால்நடைகளை தங்களது வீட்டில் வைத்து பராமரிக்காமல் சாலையில் திரிய விடுவது தொடர் கதையாக உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினம் தோறும் அவதிப்பட்டு செல்கிறார்கள்.


எனவே கடம்பத்தூர் பேரம்பாக்கம் சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story