பொதுத்தேர்வு விடைத்தாள்களை கவனமுடன் மதிப்பீடு செய்ய வேண்டும் - ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்...!


பொதுத்தேர்வு விடைத்தாள்களை கவனமுடன் மதிப்பீடு செய்ய வேண்டும் - ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்...!
x

தேர்வுத் துறைக்கு அவப்பெயர் ஏற்படாதவாறு பொதுத்தேர்வு விடைத்தாள்களை கவனமுடன் மதிப்பீடு செய்ய வேண்டும் என ஆசிரியர்களை கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

தேர்வுத் துறைக்கு அவப்பெயர் ஏற்படாதவாறு விடைத்தாள்களை கவனமுடன் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களை, கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அதனைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி தொடங்கி நடக்க உள்ளது.

அதன்படி, விடைத்தாளை திருத்தும் பணியில் ஈடுபடும் முதன்மை தேர்வாளர்கள்(ஆசிரியர்கள்), கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீடு செய்த விடைத்தாள்களிலேயே மதிப்பெண்களில் அதிகளவில் வேறுபாடுகள், மறுகூட்டல், மறுமதிப்பீடுகளின் போது கண்டறியப்பட்டு, தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிகழ்வுகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மதிப்பீடு செய்யும் போது மிகவும் கவனமுடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும்.

* மாணவர் விடைத்தாளில் நடுவில் 2 பக்கங்களில் எழுதாமல் விட்டு, அடுத்து வரும் தாளில் எழுதியிருந்தால், அதனை மதிப்பீடு செய்யாத நிகழ்வும் நடக்கிறது. இதன் மூலம் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர் பணியினை சரிவர கவனிக்கவில்லை என்பது தெரியவருகிறது.

* உதவித் தேர்வாளர்களால் விடைக்குறிப்பின்படி, மதிப்பீடு செய்து உரிய மதிப்பெண் வழங்கப்பட்ட பின்னர், முதன்மை கண்காணிப்பாளர், கூர்ந்தாய்வு அலுவலர் மீளச் சரிபார்க்கும் போது கவனக்குறைவினால் அதிகபட்ச மதிப்பெண்களைவிட கூடுதலாக வழங்கியது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் புகார் பெறப்பட்டது, தேர்வுத்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இதுபோன்ற நிகழ்வினை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏற்படும் தவறுகளுக்கு முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் மீது தக்க நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும்.

* மதிப்பீட்டு பணியின்போது தேவையில்லாமல் பேசுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். அதேபோல் செல்போனை திருத்தும் அறையில் எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

* மதிப்பீடு செய்ததில் அதிக வேறுபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுவான கூட்டல் பிழை இருந்தால், கூர்ந்தாய்வு அலுவலர் முழு பொறுப்பேற்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story