கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில், பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் நிலப்பிரச்சினை, சமூக பாதுகாப்பு திட்டம், வேலைவாய்ப்பு, கடன் உதவி, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 150 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனுக்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 12 பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 871 வீதம் ரூ.58 ஆயிரத்து 452 விலையில்லா சலவை பெட்டிகளை வழங்கினார்.

அதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் மாற்று திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் சிறு மற்றும் குறுந்தொழில் சுய வேலைவாய்ப்பு வங்கிக் கடன் மானியம் வழங்கும் திட்டத்தில் 6 மாற்றத்திறனாளிகளுக்கு சுய தொழில் செய்ய வங்கி கடனாக ரூ.5 லட்சத்து 35 ஆயிரம் பெறுவதற்கு மானிய தொகையாக ரூபாய் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 666 காண காசோலைகளை வழங்கினார். இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், பயிற்சி சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story