பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - பயனாளிகளுக்கு கலெக்டர் மானியம் வழங்கினார்


பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - பயனாளிகளுக்கு கலெக்டர் மானியம் வழங்கினார்
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு கலெக்டர் மானியம் வழங்கினார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். மக்கள் குறைந்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சினைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 99 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 52 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 39 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 42 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 94 மனுக்களும் என மொத்தம் 326 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆவின் பாலகம் அமைப்பதற்காக 4 பயனாளிகளுக்கு மானியத் தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்திற்கான அனுமதி ஆணைகளையும், சிறுகுறு தொழில் செய்ய வேலை வாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு சுய தொழில் புரிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரூ.1 லட்சம் கடன் தொகை பெறப்பட்டதை தொடர்ந்து அதில் ரூ.25 ஆயிரம் மானியத் தொகைக்கான காசோலையையும் கலெக்டர் வழங்கினார்.


Next Story