மழை வெள்ள பாதிப்பு: சென்னை மேயர் பிரியா வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


மழை வெள்ள பாதிப்பு: சென்னை மேயர் பிரியா வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x

மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சென்னை,

`மிக்ஜம்' புயல் காரணமாக பெய்த மழையால் சென்னையில் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் வடியாமல் தேங்கி நின்றது. இதனால் மின்தடை ஏற்பட்டதுடன் மக்கள் குடிநீருக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது பகுதிக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தண்ணீரை வெளியேற்ற தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் என்றும் கேட்டனர்.

இதையடுத்து மேயர் பிரியா அவர்களை சமாதானப்படுத்தினார். உங்கள் பகுதிக்கு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பால் தண்ணீர் கிடைப்பதற்கு வழி ஏற்படுத்தி தரப்படும் என்றும் உறுதி அளித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை திரும்ப பெற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story