புது வண்ணாரப்பேட்டையில் மின்சாரம் வேண்டி பொதுமக்கள் போராட்டம்


புது வண்ணாரப்பேட்டையில் மின்சாரம் வேண்டி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2023 8:19 PM IST (Updated: 5 Dec 2023 8:38 PM IST)
t-max-icont-min-icon

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது.

சென்னை,

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது.

இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தற்பொழுது மழை நீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மின்சார வாரியம் சார்பில் மின் விநியோகம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒரு சில இடங்களில் 2 நாட்கள் ஆகியும், மின் வினியோகம் வழங்கப்படவில்லை. விரைவில் மின்வினியோகம் வழங்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில்,மின் வினியோகம் வழங்ககோரி, புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள காமராஜர் சாலை சந்திப்பில் பொதுமக்கள் சாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளில் கட்டைகளை வைத்தும், பேரிகார்டுகளை வைத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் 2 மணி நேரத்தில் மின்வினியோகம் வழங்கப்பட்டுவிடும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதிகாரிகள் உறுதியளித்ததை போலவே உடனடியாக மின்வினியோகம் சீரானது. 2 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வந்தநிலையில் மின்சாரம் வந்த உடனே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

1 More update

Next Story