வீடுகளை அகற்றும் முடிவை கைவிடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


வீடுகளை அகற்றும் முடிவை கைவிடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வேகவதி ஆற்றங்கரை பகுதிகளில் சுமார் 1,460 குடும்பங்கள் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். மழைக்காலங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படுவதால் உயர்நீதிமன்ற உத்தரவின்படி வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த மக்களுக்கு காஞ்சீபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் குடியமர்த்துவதற்கு சுமார் ரூ.200 கோடி செலவில் 2,112 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

மேலும் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் பொதுமக்களின் பங்களிப்பாக மக்கள் ரூ.1½ லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருக்கும் தங்களின் வீடுகளை அகற்றக்கூடாது என கோரிக்கை விடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பிறகு அவர்கள் களைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


Next Story