புதுக்கோட்டை: காவல் நிலையம் முன்பு 4 பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு


புதுக்கோட்டை: காவல் நிலையம் முன்பு 4 பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு
x

கீரமங்கலம் காவல் நிலையம் முன்பு 4 பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணுக்கும், தஞ்சை மாவட்டம் நரியங்காடு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் கீரமங்கலம் அருகே உள்ள பனங்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான பரமேஸ்வரன் என்ற நபர், ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் ஆன்லைன் டெலிவரி செய்வதற்காக கட்டுமாவடி சென்று வந்த போது கார்த்திகாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இவர்கள் இருவரும் சுமார் 3 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கார்த்திகா தனக்கு திருமணமானதையும், 7 வயதில் ஒரு மகன் இருப்பதையும் மறைத்து பரமேஸ்வரனுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் உண்மை தெரிந்ததும் பரமேஸ்வரனை கார்த்திகாவிடம் இருந்து பிரித்து அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கார்த்திகா கீரமங்கலம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதையடுத்து இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார் பேச்சுவார்த்தியில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது பரமேஸ்வரன் கார்த்திகாவுடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட அவரது தாய் மற்றும் 3 சகோதரிகள் காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக விரைந்து செயல்பட்ட போலீசார், விஷ பாட்டிலை தட்டிவிட்டு அவர்களின் தற்கொலை முயற்சியை தடுத்தனர்.

இருப்பினும் பரமேஸ்வரனின் மூத்த சகோதரி மட்டும் விஷம் அருந்திய நிலையில், அவர் தற்போது அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே சமயம் தற்கொலை முயற்சியை தடுத்த போது, கீரமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவரின் கண்ணில் விஷம் பட்டதால் அவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் கீரமங்கலம் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story