புதுக்கோட்டை: மைதானத்தில் மயங்கி விழுந்து கபடி வீரர் உயிரிழப்பு..!


புதுக்கோட்டை: மைதானத்தில் மயங்கி விழுந்து கபடி வீரர் உயிரிழப்பு..!
x
தினத்தந்தி 25 Dec 2023 2:12 AM GMT (Updated: 25 Dec 2023 3:05 AM GMT)

மைதானத்தில் கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் பெருமநாடு அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 48). இவருடைய மனைவி தமிழரசி (41). இவர்களுக்கு யோகேஸ்வரன் (19), சிவா (18) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் கபடி வீரரான யோகேஸ்வரன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் அன்னவாசல் அருகே மாங்குடியில் நேற்று கபடி போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். கபடி போட்டியில் யோகேஸ்வரன் கலந்து கொண்டு விளையாடினார்.

அப்போது யோகேஸ்வரன் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை சக வீரர்கள் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு யோகேஸ்வரனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கபடி போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மைதானத்தில் கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story