போக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை முதல் இடம்


போக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை முதல் இடம்
x

போக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடத்தில் இருந்ததால் அதிகாரிகள் மாநாட்டில் பாராட்டு கிடைத்ததாக போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தெரிவித்தார்.

புதுக்கோட்டை

அதிகாரிகள் மாநாடு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு கடந்த 3, 4-ந் தேதிகளில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே "தினத்தந்தி"க்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

போக்சோ வழக்கு தண்டனையில் முதல் இடம்

கேள்வி:- மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை பற்றி என்ன பேசப்பட்டது?

பதில்:- இந்த மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு பெருமைப்படும் வகையில் இருந்தது. நமது மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அதிகம் எதுவும் இல்லை. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையின் பணி சிறப்பானதாகவே உள்ளது. மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கொலை வழக்குகளில் கொலையாளிகளை கைது செய்தல், அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தல், பழைய வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிதல், போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.

போக்சோ வழக்குகளில் 2021 முதல் 2023-ம் ஆண்டில் இதுவரை 38 வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டில் இதுவரை 14 போக்சோ வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. தமிழகத்தில் போக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. இந்த தண்டனையை பெற்றுத்தர போலீசார் குறிப்பிட்ட நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ததன் மூலம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புகார் மனுக்கள்

கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கொலை வழக்குகள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 29 கொலை வழக்குகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் இதுவரை 16 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பழிவாங்குதல், சாதி, ரவுடி என்ற பிரிவில் கொலை வழக்கு ஏதும் இல்லை. இந்த ஆண்டு இதுவரை கண்டுபிடிக்கப்படாத கொலை வழக்கு எதுவும் இல்லை. கடந்த ஆண்டில் பொன்னமராவதி பகுதியில் நகை, பணத்திற்காக இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை ஆதாய கொலை வழக்கு எதுவும் இல்லை. முதல்-அமைச்சரின் முகவரி திட்டம், வாரத்தில் புதன்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் நமது மாவட்டத்தில் அதிக புகார் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டிருந்தன. இதில் ஏ, பி, சி என 3 வகையாக பிரித்து மதிப்பீடு செய்ததில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிக சதவீதம் வழங்கப்பட்டிருந்தது. இதிலும் நமது மாவட்டத்திற்கு பெருமை தான் கிடைத்தது.

முதல்-அமைச்சர் பாராட்டு

கேள்வி:- திருச்சி நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கில் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்ததை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியது பற்றி...

பதில்:- மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது இந்த வழக்கை குறிப்பிட்டு பேசி நமது காவல்துறையை பாராட்டினார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆரம்பம் முதலே துரித விசாரணை நடத்தி, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதோடு மட்டுமில்லாமல் வழக்கிற்கான ஆதாரங்களை சரியாக திரட்டி, குறிப்பிட்ட நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தோம். அதனால் இந்த வழக்கு விசாரணையில் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இந்த வழக்கில் புலன்விசாரணை அதிகாரி உள்பட போலீசார், அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டுதல்

கேள்வி:- மாநாட்டில் அறிவுறுத்தப்பட்ட உத்தரவுகளுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?

பதில்:- நமது மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையாக பராமரிக்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கில் எந்த பிரச்சினையும் இல்லை. மாவட்டத்தில் எதுவும் நடைபெறாமல் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கீழ்மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை காவல்துறை பணி சிறப்பாக நடைபெறுகிறது. நமது மாவட்டத்தில் ரவுடிகள் அட்டகாசம் இல்லை, ஆதாய கொலைகள் இல்லை, சட்டம்-ஒழுங்கு கெடுகிற வகையில் எந்த பிரச்சினையும் எழவில்லை. மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி உள்பட முக்கிய நிகழ்வுகளை எந்தவித பாதிப்பும் இல்லாமல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தி முடித்துள்ளோம். இந்த நடவடிக்கைகள் தொடரும். நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படும். பொதுமக்கள் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் நிலையங்களில் பெறப்படும் புகார்கள் மற்றும் பதிவு செய்யப்படும் வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். சமூக வலைத்தளங்களில் வதந்தி, பிரச்சினைகளை தூண்டும் வகையில் பதிவுகள் உள்ளதா? என்பதை கண்காணித்து வருகிறோம். போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளர் பணிக்கு ஒதுக்கப்பட்டவர்களை வேறு பணிக்கு நியமிக்கப்படுவதில்லை.

கேள்வி:- மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது?

பதில்:- மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் சாலை விபத்துகள் அதிகம் ஏற்பட்ட இடங்களை கணக்கெடுத்து அந்த இடங்களில் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் மூலம் விபத்துக்கள் குறைந்துள்ளது. விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க மேலும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், விபத்து ஏற்படக்கூடிய இடங்களில் இரும்பு தடுப்புகள், ஒளிரும் விளக்குகள், சிக்னல் விளக்குகள் உள்ளிட்டவை வைக்கப்படும்.

கேள்வி:- மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து...

பதில்:- குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ரவுடிகள் காவலில் வைக்கப்பட்டு, 11 பேர்களின் மீது அனைத்து சட்ட அம்சங்களிலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக பழிவாங்கும், ரவுடி கொலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் (2023) இதுவரை 80 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 126 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் 496 ½ கிலோ கஞ்சா மற்றும் 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், குற்றம் சாட்டப்பட்ட 18 நபர்கள் மீது குற்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றவாளிகள் 5 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் ரூ.16,67,554 மதிப்புள்ள சொத்துகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் 34 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் சாராயம், சட்டவிரோத மது, கஞ்சா, குட்கா, லாட்டரி போன்ற சட்ட விரோத செயல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க அறிவிக்கப்பட்ட 8531085350 என்ற செல்போன் எண்ணிற்கு தகவல்கள் அதிகம் வருகிறது. இதன் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த செல்போன் எண்ணில் தகவல் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story