தேர்களை வடம் பிடித்து இழுத்து தெருவில் நிறுத்தி விடுவதா? தி.மு.க. அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்


தேர்களை வடம் பிடித்து இழுத்து தெருவில் நிறுத்தி விடுவதா? தி.மு.க. அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்
x

அறநிலையத்துறை சட்டத்திற்கும் ஆகம விதிமுறைகளுக்கும் முரணாக குமரி மாவட்டம், குமாரகோவில் தேர்களை வடம் பிடித்து இழுத்து தெருவில் நிறுத்தி விடுவதா? என்று தமிழக அரசுக்கு தனது கடும் கண்டனத்தை அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

ஆகம விதிகளுக்கு முரணாக

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆளும் தி.மு.க. அரசு மீண்டும் மீண்டும் தமிழக இறை நம்பிக்கையாளர்களின் பெருமையை, பொறுமையை, சகிப்புத்தன்மையை சோதித்துக்கொண்டே இருக்கிறது. ஆன்மிகத் தலைவர்களையும், ஆதீனங்களையும், இறையடியாளர்களையும், கோவில் பொறுப்பாளர்களையும், தன்னார்வலர்களையும் தொடர்ந்து ஆளும் தி.மு.க. அரசு அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது.

அந்த வரிசையில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள குமாரகோவில் முருகன் கோவிலில் நடைபெற்ற வைகாசி தேரோட்டம் நிகழ்ச்சியில், இந்து அறநிலையத்துறை சட்டத்திற்கும் ஆகம விதிமுறைகளுக்கும் முரணாக, இறை நம்பிக்கை இல்லாத மாற்று மதத்தை சேர்ந்த அமைச்சர் மனோதங்கராஜ் உள்ளிட்ட தி.மு.க. வினர் தேர்வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்க வந்தபோது பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேர்களை தெருவில் விட்ட தி.மு.க.வினர்

பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்து, பொதுமக்களை மிரட்டி பக்தர்களை விரட்டி சீருடை அணியாத போலீசாரை பயன்படுத்தி, வடம் பிடித்து இழுத்த தி.மு.க.வினர், 2 தேர்களையும் நகர்த்தி, தெருவிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராடிய பா.ஜ.க.வினரை காவல் துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

மதச்சார்பின்மை என்ற பெயரிலே ஒரு பிரிவினருக்கு ஆதரவாகவும், மறுபக்கம் தமிழரின் பாரம்பரிய மரபுக்கு எதிர்ப்பாகவும் செயல்படுவது ஆட்சிக்கு அழகல்ல. தெருவெல்லாம் மேடை போட்டு நாத்திகவாதம் பேசும்போது எந்த ஆத்திகரும் வந்து தடுப்பதில்லை. அதே போல ஆளும் கட்சிக்கு எப்போது இறை நம்பிக்கை இல்லையோ அப்போதே ஆலயத்தை வழிபடும் பக்தர்களுக்கு இடையூறு செய்யாமல் ஒதுங்கியிருக்க வேண்டாமா? மேலும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டிய அரசே அத்துமீறல் செய்யலாமா?

பா.ஜ.க. கண்டனம்

தி.மு.க.வின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாகர்கோவில் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி, ஆர்.எஸ்.எஸ். பேரியக்கத்தின் குமரி மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மிசா சோமன், விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்க மாநில பொறுப்பாளர் காளியப்பன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட பலர் கைதாகி உள்ளனர். அமைச்சர் மனோ தங்கராஜின் சர்வாதிகார போக்கையும் அதற்கு முழுமையாக துணையாக இருந்து நீதிக்காக போராடிய பா.ஜ.க. மற்றும் ஆன்மிக இயக்க பொறுப்பாளர்களையும், பக்தர்களையும் கைது செய்த காவல்துறையும், அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகத்தையும் பா.ஜ.க. கண்டிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story