மூதாட்டியை கீழே தள்ளி மூக்குத்தி-பணம் பறிப்பு


மூதாட்டியை கீழே தள்ளி மூக்குத்தி-பணம் பறிப்பு
x

வழி காட்டுங்கள் என்று மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று மூதாட்டியை கீழே தள்ளி மூக்குத்தி-பணம் பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி தெற்கு காட்டு கொட்டகையை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 85). இவர் நேற்று முன்தினம் மாலை வடக்கு மாதவியில் உள்ள விநாயகர் கோவிலில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், செல்லம்மாளிடம் சோமண்டாபுதூருக்கு எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்டுள்ளார். மேலும் அந்த வாலிபர் கருப்பு நிற முககவசம் அணிந்திருந்தார். அந்த வாலிபர் சோமண்டாபுதூருக்கு வழி காட்டுங்கள் என்று கூறி செல்லம்மாளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார். ஆனால் செல்லம்மாள் இறக்கி விட சொன்ன இடத்தில் இறக்காமல் அவர் அருகே உள்ள உப்போடை என்ற இடத்தில் இறக்கி விட்டு கீழே தள்ளி விட்டு சென்றுள்ளார். இதில் 4 பற்கள் கீழே விழுந்தும், காயத்துடன் சுய நினைவின்றி கிடந்த மூதாட்டி செல்லம்மாள் மயக்கம் தெளிந்து பார்த்த போது அவர் அணிந்திருந்த ¼ பவுன் மூக்குத்தியும், இடுப்பில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தையும் காணவில்லை. இது தொடர்பாக மூதாட்டி செல்லம்மாள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story