உல்லாசமாக இருக்க மறுத்ததால் ஆத்திரம்: மசாஜ் சென்டரில் இளம்பெண்ணை தாக்கி நகையை பறித்த வாலிபர்


உல்லாசமாக இருக்க மறுத்ததால் ஆத்திரம்: மசாஜ் சென்டரில் இளம்பெண்ணை தாக்கி நகையை பறித்த வாலிபர்
x

மசாஜ் சென்டரில் உல்லாசமாக இருக்க மறுத்த இளம்பெண்ணை தாக்கி அவர் அணிந்திருந்த நகையை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. ஆன்லைனில் இது தொடர்பான விளம்பரத்தைச் பார்த்துவிட்டு, பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் என்ற அஜித் (வயது 25) என்பவர் அந்த மசாஜ் சென்டருக்கு சென்றார்.

அவரிடம் கட்டணமாக ரூ.1,500 பெற்றனர். பின்னர் அங்குள்ள தனி அறையில் அவருக்கு இளம்பெண் ஒருவர் மசாஜ் செய்தார். இளம்பெண்ணின் அழகில் மயங்கிய சுரேஷ், கூடுதல் பணம் தருவதாகவும், தன்னுடன் உல்லாசமாக இருக்கும்படியும் இளம்பெண்ணை வலியுறுத்தினார்.

அதற்கு இளம்பெண் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், இளம்பெண்ணை தாக்கி, அவர் அணிந்து இருந்த நகையை பறித்து விட்டு தப்பிச்சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மசாஜ் சென்டர் ஊழியர்கள், விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேசை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், பலமுறை அந்த மசாஜ் சென்டருக்கு வந்து சென்றுள்ளார். அப்போதெல்லாம் கூடுதல் பணத்தை கொடுத்து, தனது ஆசைக்கு இணங்கும்படி கூறியும் இளம்பெண் மறுத்ததால், பலமுறை பணம் செலவு செய்து வந்தும் தனது ஆசை நிறைவேறாத ஆத்திரத்தில் இளம்பெண்ணை தாக்கி, அவரிடம் இருந்த நகையை பறித்து சென்றது தெரிந்தது.

இளம்பெண்ணிடம் பறித்த நகையை சுரேஷ் அடகு வைக்க சென்றபோது, அதில் சில நகைகள் கவரிங் என்பது தெரியவந்தது. அவர் அடகு வைத்த ஒரு பவுன் நகையை போலீசார் மீட்டனர்.


Next Story