ரகளை செய்ததை வீடியோ எடுத்ததால் ஆத்திரம்:போலீஸ்காரரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது


ரகளை செய்ததை வீடியோ எடுத்ததால் ஆத்திரம்:போலீஸ்காரரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:46 PM GMT)

தேவதானப்பட்டியில் ரகளை செய்ததை வீடியோ எடுத்த ஆத்திரத்தில் போலீஸ்காரரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 24). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், தேவதானப்பட்டி அரிசி கடை பஸ் நிறுத்தத்தில் நின்று அங்கு வந்தவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அரசு பஸ்சை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீஸ்காரர்கள் கதிரேசன் (48), வாலி ராஜன் (42) ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் முத்துசாமியை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போலீஸ்காரர்கள் முன்பே ரகளை செய்தார். இதை கதிரேசன் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கதிரேசனை குத்தினார். இதைக்கண்டதும் வாலிராஜன், முத்துசாமியை மடக்கி பிடித்தார். பின்னர் காயமடைந்த கதிரேசன் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து முத்துசாமியை கைது செய்தனர்.


Next Story